உடல் நலம் : பணம் என்பது வெறும் காகிதம்

Tuesday, November 5, 2019

பணம் என்பது வெறும் காகிதம்



ஹோட்டல் முதலாளியின் மாப்பிள்ளை 500 ரூபாய் நோட்டு ஒன்றை அசல் நோட்டுப் போல தத்ரூபமாக ஜெராக்ஸ் செய்துக் கொண்டான்.

அந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு தனது மச்சான் ஹோட்டலுக்குப் போனான்.

கல்லாவில் இருந்த மச்சானிடம் சிறிது நேரம் பேசி விட்டு பையிலிருந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை எடுத்து மச்சான் இடம் கொடுத்து மச்சான் இதை கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள் நான் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி அவரிடம் கொடுத்து விட்டுப் போய்விட்டான்.

சிறிது நேரம் கழித்து ஹோட்டலுக்கு பால் ஊற்றுபவர் தனக்கு ஒரு 500 ரூபாய் அவசரமாக வேண்டியிருக்கிறது. தனக்கு வர வேண்டிய பால் பணத்தில் கழித்துக் கொள்ளலாம் என்று சொல்லி முதலாளியிடம் பணம் கேட்கிறார்.

கல்லாவில் 500 ரூபாய் சேரவில்லை. சிறிது நேரம் யோசித்த முதலாளி தனது மாப்பிள்ளை கொடுத்து விட்டு சென்ற 500 ரூபாய்யை பால்காரரிடம் கொடுக்க அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு கடையை விட்டு சென்று விடுகிறார்

மாப்பிள்ளை வருவதற்குள் வியாபாரத்தில் 500 ரூபாய் தேற்றி விட முடியாதா என்ற நம்பிக்கையில் தான் அந்தப் பணத்தை எடுத்து பால்காரரிடம் கொடுத்து விட்டார் ஹோட்டல்காரர்.

ஹோட்டலில் இருந்து 500 ரூபாயை வாங்கிச் சென்ற பால்காரர் நேராக தனது மனைவிக்குப் பிரசவம் பார்த்த லேடி டாக்டரை சந்தித்து அவருக்கு பாக்கி வைத்திருந்த 500 ரூபாயைக் கொடுக்கிறார்.

டாக்டரும் அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள அங்கு இருந்த தனது கார் டிரைவரிடம் அந்தப் பணத்தை கொடுத்து பஜாரில் இருக்கிற டெய்லர் கடையில் பழைய பாக்கிக்கு இந்த 500 ரூபாய் பணத்தைக் கொடுத்து விட்டு பிள்ளைங்களுக்கு எடுத்து வைத்திருக்கும் புது துணிகளைத் தைக்க அளவெடுக்க வரச் சொல்லவும் என்று சொல்லி டிரைவரை டெய்லர் கடைக்கு அனுப்புகிறார் டாக்டர்.

டிரைவரும் டெய்லர் கடைக்குப் போய் டாக்டர் அம்மா வீட்டுப் பாக்கிக்கு இந்த 500 ரூபாய்யை வாங்கிக் கொள்ளும். வீட்டில் பிள்ளைங்களுக்கு புதுத் துணி அளவெடுக்கும் வரச் சொன்னார்கள் என்று தகவல் சொல்லி விட்டு நகர்ந்தார் டிரைவர்.

காஜாப் பையனிடம் கடையைப் பார்த்துக்கொள் என்றுச் சொல்லி டிரைவர் கொடுத்த 500 ரூபாயை எடுத்துக் கொண்டு ஹோட்டலுக்குக் கிளம்பினார் டெய்லர்.

கல்லாவில் அமர்ந்திருந்த ஹோட்டல் முதலாளியிடம் ஐயா என் மகளின் சடங்குக்கு தங்கள் கடையில் சாப்பாடு வாங்கிய வகையில் 500 ரூபாய் பாக்கி இருக்கிறது இந்த 500 ரூபாயை வாங்கிக் கொண்டு கணக்கை நேர் செய்துக் கொள்ளுங்கள் என்று டிரைவர் கொடுத்த 500 ரூபாயை ஹோட்டல் முதலாளியிடம் தருகிறார் டெய்லர். சரி அப்படியே செய்துக் கொள்ளலாம் என்றபடியே ஐநூறு ரூபாயை வாங்கி வைத்துக் கொண்ட முதலாளி அதை கல்லாவில் தனியே ஒரு டப்பாவில் போட்டு வைக்கிறார்.

ஏனென்றால் மாப்பிள்ளை வந்துக் கேட்டால் 500 ரூபாய் நோட்டு தர வேண்டுமே என்ற எண்ணத்தில் இந்த 500 முழு ரூபாய் நோட்டைப் பத்திரப்படுத்தி வைக்கிறார்.

சிறிது நேரத்தில் அவரின் மாப்பிள்ளை வந்து மச்சான் நான் கொடுத்த 500 ரூபாயைக் கொடுங்கள் என்றுக் கேட்டு வாங்கிக் கொள்கிறார். தான் கொடுத்த 500 ரூபாய் ஜெராக்ஸ் நோட்ஸ் தான் அது என்பதை உறுதி செய்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் முதலாளியின் மாப்பிள்ளை.

வெளியே வந்த மாப்பிள்ளை ஜெராக்ஸ் எடுத்த 500 ரூபாயை சுக்கல் சுக்கலாகக் கிழித்துக் காற்றில் பறக்க விட்டார். இந்த 500 ரூபாய் ஒரு சுற்று சுற்றி வந்ததில் நடந்தது என்ன என்றுக் கொஞ்சம் பார்ப்போம்.

முதலாளி பால்காரனுக்கு கொடுக்க வேண்டிய 500 ரூபாய் பாக்கிக் கணக்கு நேராகிவிட்டது. அது போலவே பால்காரன் டாக்டருக்குக் கொடுக்க வேண்டிய கடன் நேர் ஆகிவிட்டது. அப்படியே டாக்டர் டெய்லருக்குக் கொடுக்க வேண்டிய கடன் நேராகிவிட்டது. அது போலவே டெய்லர் ஹோட்டலுக்குக் கொடுக்க வேண்டிய கடன் நேராகிவிட்டது.

இப்பொழுது ஜெராக்ஸ் நோட்டும் சுக்கல் சுக்கலாகி காற்றில் பறந்து விட்டது.

ஆனால் இத்தனை பேர் கடனும் நேராகி இருப்பது நிஜமே. இதில் நஷ்டம் அடைந்தவர் யாரும் இருக்கிறாரா?

அல்லது மாயாஜாலம் ஏதும் நடந்துள்ளதா?

ஆகையால்  சொந்தங்களே பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமே நட்பு உறவு இதற்கு மதிப்பளிப்போம். ஆனால் பணம் பணம் என்று போதையாகி விட மட்டும் வேண்டாம் √

No comments:

Post a Comment