உடல் நலம் : கும்பகோணம் அய்யாவாடி அருள்மிகு பிரத்யங்கிரா தேவி திருக்கோவில்

Monday, January 20, 2020

கும்பகோணம் அய்யாவாடி அருள்மிகு பிரத்யங்கிரா தேவி திருக்கோவில்






சுவாமி : அருள்மிகு அகத்தீஸ்வரர்.

அம்பாள் : அருள்மிகு தர்மசம்வர்த்தினி(பிரத்யங்க தேவி).

தலச்சிறப்பு :  பிரத்யங்க தேவிக்கு அமாவாசை தோறும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை  யாகம் நடைபெறும்.  இந்த யாகத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பகை அகலும்.  பல நன்மைகள்  கிட்டும், பஞ்சபாண்டவர்கள் வழிபட்டதால் ஐவர் பாடி எனப் பெயர் பெற்றதாக கூறுவர்.

தல வரலாறு : பஞ்சபாண்டவர்கள் தேசத்தை இழந்து, அவமானத்தை சந்தித்து, துக்கமும்  வேதனையும் பொங்க, இங்கே சுற்றித் திரிந்தனர் ஐவரும்.  சுடுகாடுகளுக்கு நடுவே இருக்கும் ஒரு  பகுதியைத் தேடி அலைந்தனர்.  இந்த ஐவரும் சகோதரர்கள்.  விலங்குகள் ஏதும் தாக்கி  இறந்துவிடுவோமோ... தேசத்தை மீட்க முடியாமல் போய்விடுமோ... என்று பயத்தில் திரிந்தனர்.   எதிரிகளால் தொல்லை நேருமோ...  என்று பதுங்கி வாழ்ந்தனர்.

நல்ல உணவும் உறங்குவதற்கு  சரியான இடமும் இல்லாததால் நோய் வந்துவிடுமோ என்று கவலைப் பட்டனர்.  செல்வச்  செழிப்புடன் தான-தருமங்களைச் செய்தபடி இருந்த நிலை மாறி, தரித்திரம் பிடித்து வாட்டுகிறதே...  என்று கிடைக்கும் உணவை சாப்பிட்டு பொழுதைக் கழித்தனர். பிரத்தியங்கராதேவியை வழிபடுங்கள்; உங்களின் அத்தனை பயத்தையும் போக்குவாள்; பலம் கூட்டுவாள்; வெற்றியைத்  தருவாள். அவளை பூஜித்து அவளின் அருளைப் பெறுங்கள் என்று அந்த சகோதரர்கள் ஐவருக்கும்  ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது.

ஒரு நாள், இவர்கள் தேடி வந்த இடமும் கிடைத்தது. அங்கே  சுயம்பு மூர்த்தியாகக் காட்சி தந்தாள் பிரத்தியங்கராதேவி.  இதைக் கண்டு பூரித்தவர்கள்.  தேவியை அர்ச்சித்து வழிபட பூக்களைத் தேடினர்.  அது சித்திரை மாதம் என்பதால், எங்கே
தேடியும் பூக்கள் கிடைக்கவில்லை.  நொந்து போனார்கள்.  "இதென்ன சோதனை? தேவியை வணங்க, பூக்கள் கூட கிடைக்கவில்லையே" என்று வருந்தினர்.  அந்த நேரம், எதிரே ஓங்கி உயர்ந்து நிற்கும்  ஆலமரத்தைக் கண்டனர்.  இந்த மரத்தின் இலையையே பூக்களாக பாவித்து, பிரத்யங்கிரா  தேவியை தியானித்து ஆலம் இலைகளையே எடுத்து அர்ச்சித்தனர்.  அந்த இலை, ஐந்து ஐந்து இலைகளாக தேவியின் திருப்பாதங்களில் விழுந்தன.  இப்படி நெடுநாட்களாக பூஜை செய்த  பலனாக, பகைவர்களை வென்றனர்; தேசத்தை மீட்டனர்; இழந்த அதிகாரத்தைப் பெற்றனர்.   தேசமே பூரித்துப் போனது.

இந்த ஐந்து பேரும் பஞ்ச பாண்டவர்கள்.  ஐவர் வந்து பூஜித்ததால், இந்தத் தலத்துக்கு ஐவர்பாடி என்ற பெயர் ஏற்பட்டது.   இப்போது அய்யாவாடி என்று அழைக்கப்படுகிறது.  இங்கே சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி, தன்னை  வணங்குவோரது அனைத்து பயங்களையும் போக்கி அருள் புரிந்து வருகிறாள் பிரத்யங்கிராதேவி. கும்பகோணம் திருநாகேஸ்வரத்துக்கு அருகில் உள்ள அய்யவாடியில் குடிகொண்டிருக்கும்  தேவியின் ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்றைக்கும் சுடுகாடுகள் இருக்கின்றன.

வழிபட்டோர் : பஞ்ச பாண்டவர்கள்.

நடைதிறப்பு : காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

No comments:

Post a Comment